குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் மேற்கு வங்கம் முதலிடம்
கோல்கட்டா : குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகமுள்ள மாநிலம் என்ற சிறப்பை, மேற்கு வங்கம் பெற்றுள்ளது.
இது குறித்து, மேற்கு வங்க குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர், ராஜீவ் சின்ஹா கூறியதாவது: மேற்கு வங்க அரசு, புதிய வர்த்தகங்களை உருவாக்கி, தொழில் முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக, 2016 -– 17ம் நிதியாண்டில், அதிகளவில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கொண்ட, 10 மாநிலங்களில், மேற்கு வங்கம், 11.62 சதவீத பங்களிப்புடன், முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது. உ.பி., மஹாராஷ்டிரா ஆகியவை, அடுத்த இடங்களில் உள்ளன.
ஐந்து ஆண்டுகளில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அதிக வங்கி கடன் வழங்கிய சிறப்பும், மேற்கு வங்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்நிறுவனங்களுக்கு, 2017ல், 1,500 கோடி டாலர் வங்கி கடன் வழங்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 6 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இது, தயாரிப்புத் துறையில், 33 சதவீதம்; ஏற்றுமதியில், 45 சதவீதமாக உள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2017ல், ‘பிராப்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, தொழில் கொள்கை மற்றும் வர்த்தக மேம்பாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை, சிறப்பாக மேற்கொள்ளும் மாநிலங்களில், மேற்கு வங்கம் முதலிடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச வர்த்தக மாநாடு:
மேற்கு வங்க சர்வதேச வர்த்தக மாநாடு, கோல்கட்டாவில் நேற்று துவங்கியது. இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல் உள்ளிட்டோருடன், சர்வதேச தொழிலதிபர்கள் பலர் பங்கேற்கின்றனர்.