பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : கார்த்தி

தினமலர்  தினமலர்

தீரன் படம் போன்றே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜ்ஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கபோய், வீரமரணம் அடைந்திருக்கிறார், தமிழகத்தை சேர்ந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன். இவரது உடல், அரசு மரியாதையுடன் நெல்லை மாவடத்தில் உள்ள சாலைப்புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெரியபாண்டியனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து கார்த்தி கூறியதாவது... பெரியபாண்டியன் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான், நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க, உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது“ என்றார்.

உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மன அழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15 சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்ல எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார். அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.

மூலக்கதை