வங்கதேச இறக்குமதி ஜவுளி துறை பாதிப்பு
சோமனுார் : வங்கதேசம் வழியாக வெளிநாட்டு துணி அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய ஜவுளி உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டில், 24 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில், ஆறு லட்சமும்; அதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், வெளிநாட்டு துணி இறக்குமதியால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளதாக, உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது: நெசவு தொழில் வீழ்ச்சியால், கோவை மாவட்டத்தில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜவுளி துறையினரும் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை. இதனால், இதையே நம்பி உள்ள விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆப்ரிக்க நாடுகளுக்கு துணி ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அதேசமயம், வங்கதேசம் வழியாக மற்ற வெளிநாட்டு துணி, வரி ஏதும் விதிக்கப்படாமல் அதிகளவில் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் தான், இந்திய துணி உற்பத்தி முழுவதுமாக பாதிப்படைந்துள்ளது. எனவே, வெளிநாட்டு துணி இறக்குமதியை கட்டுப்படுத்தி, இந்திய ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.