அக்னி வெயில் எதிரொலி; கற்றாழை விற்பனை ஜரூர்
சென்னை : வெயில் காரணமாக, கற்றாழை விற்பனை சென்னையில் அதிகரித்துள்ளது.
சென்னையில் மழைக்காலத்தை தவிர்த்து மற்ற நாட்களில் கற்றாழை விற்பனை அதிகமாக இருக்கும். அதுவே கோடைகாலத்தில் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும். தற்போதைய அக்னி வெயில் காரணமாக, திண்டிவனம், திண்டுக்கல் போன்ற பகுதியிலிருந்து சென்னைக்கு தினமும், 10 டன் கற்றாழை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இது குறித்து திண்டிவனத்தை சேர்ந்த சம்பத் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் மட்டும், 22 கடைகளில் கற்றாழை சப்ளை செய்கிறோம். இதற்காக சொந்தமாக திண்டிவனத்தில் கற்றாழை பயிர் செய்துள்ளோம். சாதாரணமான நாட்களில் ஒரு கடைக்கு, 150 கிலோ கற்றாழை விற்பனையாகும். அதுவே கோடை காலத்தில் இரண்டு மடங்காக இருக்கும்.
தற்போது கற்றாழை மொத்த விற்பனையில் ஒரு டன், 12 ஆயிரம் ரூபாயாக உள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கற்றாழை, 15 – 20 ரூபாயாக உள்ளது. இங்கிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், கற்றாழையை மொத்தமாக அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.