சிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை
புதுடில்லி : ‘குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் தொடர்பான விதிமுறையை தளர்த்த வேண்டும்’ என, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி விதியின்படி, ஒரு நிறுவனம், 90 நாட்கள் வரை, வங்கியில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்தால், அது, வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். இத்தகைய நிறுவனத்திற்கு, வங்கி மேற்கொண்டு கடன் வழங்காது. இதனால், நிறுவனங்கள் தொழிலை தொடர முடியாமல், முடங்கும் நிலை உண்டாகும். இத்தகைய நிலைக்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆளாவதை தவிர்க்கும் பொருட்டு, அவற்றுக்கான, வாராக்கடன் தொடர்பான விதிமுறையை தளர்த்த வேண்டும் என, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கூடுதல் செயலர், ராம் மோகன் மிஸ்ரா கூறியதாவது: ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, 90 நாட்கள் வரை கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்தால், அந்த கடன் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 180 நாட்களாக உயர்த்த வேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர், ஏ.கே.பாண்டா, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் புரியும் தொழில்களில், உடனடியாக பணம் கிடைப்பதில்லை. சந்தை சார்ந்த தொழில்களில், எதிர்பாராத சுணக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்தகைய தருணங்களில் கிடைக்கும், வங்கிக் கடன் தான், தொழில் முடங்காமல், தொடர்ந்து இயங்க கைகொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.