ஆசியாவைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளை! - பெண்ணுக்கு சிறை!!
ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிட்ட காரணத்துக்காக 15 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Créteil சிறுவர்களுக்கான நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. சமீபத்தில் 183 (Vitry-sur-Seine) வழி பேரூந்தில் நான்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொள்ளையில், இளம் பெண் ஒருவர் ஈடுபட்டதாகவும், சில இலட்சம் யூரோக்கள் வரை திருடியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளை ஆரம்பித்த Vitry காவல்நிலைய அதிகாரிகள், கல்லூரியில் படிக்கும் 15 வயதுடைய இளம் பெண்ணை கைது செய்தனர். இவரே இதுபோன்ற பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணை அப்பகுதி காவல்துறையினர் முன்னதாகவே நன்கு அறிவார்கள் எனவும், முன்னதாக 56 வயதுடைய பெண் ஒருவரிடம் கொள்ளையிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த கொள்ளை சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் சில மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.