சூடுபிடிக்கும் குடிநீர் விற்பனை
சென்னை : சென்னையில் கோடை வெப்பம் தகிக்க துவங்கியுள்ள நிலையில், குடிநீர் கேன் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னையில் இந்தாண்டு கோடை வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த சில தினங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், குடிநீர் விற்பனை மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
புறநகரிலிருந்து லாரிகளில் எடுத்துவரப்படும் குடிநீர், சென்னையில் வீடுவீடாக சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஒரு குடம் 5- – 10 ரூபாய் வரை தண்ணீர் விற்பனையாகிறது. அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு கேன் மூலம் சப்ளையாகும் குடிநீர் ஒரு கேன் 20 – 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளதால், பாரிமுனை, எம்.கே.பி.நகர், கொளத்துார், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் குடிநீர் விற்பனை கடைகள் முளைத்துள்ளன.