இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்!

PARIS TAMIL  PARIS TAMIL
இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்!

இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
 
சங்கானையில் ஆலயக் குருக்களை கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
குருக்கள் மற்றும் அவரது பிள்ளைகளை சுட்டு படுகாயப்படுத்தியமைக்கு, மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது” என மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தண்டணைத் தீர்ப்பை வழங்கினார்.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றை கொள்ளையிட்டு சென்றனர்.
 
துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
 
இந்த வழக்கில் காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணிம் சிவரூபன் ஆகியோருடன், இராணுவ சிப்பாயான பேதுறு குணசேனவும் எதிரிகளாகக் கைது செய்யப்பட்டனர்.
 
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த வழக்கு யாழ். மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன. வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் தொகுப்புரை வழக்கை நெறிப்படுத்தினார்.
 
முதலிரண்டு எதிரிகள் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும், மூன்றாவது எதிரியான இராணுவ சிப்பாய் சார்பில் மன்றினால் நியமிக்கப்பட்ட
 
சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவாவும் முன்னிலையாகி தமது தொகுப்புரைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை