மளிகை பொருட்கள் வாங்க ஏற்ற நேரம் இது
புதிய வரவு அதிகரித்து உள்ளதால், வீட்டு மளிகை பொருட்களை மொத்தமாக வாங்குவதில் பெண்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
வசந்தகாலம் துவங்கிஉள்ளதை தொடர்ந்து, அறுவடை முடிந்து நெல், பருப்பு வகைகள் அதிகளவு வரத் துவங்கியுள்ளன. பருப்பு வகைகளின் வெளிநாட்டு கொள்முதலுக்கு தடை விதித்துள்ள நிலையில், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கடலை பருப்பு உள்ளிட்டவை அதிகளவு சென்னைக்கு வரத் துவங்கியுள்ளன. அதே போல் கர்நாடகா, குஜராத்திலிருந்து துவரம் பருப்பு வகைகள் வரத் துவங்கியுள்ளது.
மொத்த விலை கடையில் கடலை பருப்பு ஒரு கிலோ, 40 – 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு, 61 – 71 ரூபாய் வரை விற்பனைஆகிறது. பாசிப் பருப்பு, 65 – 71 ரூபாய் வரையிலும்; உளுத்தம் பருப்பு, 60 – 69 ரூபாய் வரையிலும் விற்பனைக்கு வந்தள்ளது. மசூர் பருப்பு, 43 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால், வீட்டுத் தேவைக்கான பருப்பு, புளி, மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களை மொத்தமாக வாங்குவதில் பெண்கள் முனைப்பு காட்டத் துவங்கி உள்ளனர். கொத்தவால்சாவடி மொத்த விலை கடைகளில் புறநகர் பெண்கள் கூட்டம் கூட்டமாக மளிகை பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பிப்ரவரி – மார்ச் மாதத்தில் வரத்து அதிகம் இருக்கும்.இந்த நேரத்தில் வீட்டுக்கான மளிகைப் பொருட்களை, 10 பேர் கூட்டாக சேர்ந்து மொத்தமாக வாங்கி பிரித்து கொள்வர். இதனால் வீட்டுச் செலவில், 30 சதவீதம் அளவுக்கு சேமிக்க முடியும். பொருளும் தரமாக கிடைக்கும்’ என்றனர்.
அரக்கோணம், வாணியம்பேட்டையை சேர்ந்த அம்பிகா, கலா, விஜயா உள்ளிட்டோர் கூறியதாவது: நாங்கள் ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி பிரித்து கொள்வோம். இதனால் குடும்பச் செலவில், 40 சதவீதத்திற்கு மேல் சேமிக்க முடியும். மொத்தமாக வாங்கும் போது, 1 கிலோ 40 ரூபாய்க்கு கிடைக்கும் கடலை பருப்பு, சில்லரையாக ஒவ்வொரு மாதமும் வாங்கினால் ஒரு கிலோவுக்கு, 70 ரூபாய் வரை தரவேண்டியிருக்கும். இந்த மாதத்தில் தான் சாகுபடி முடிந்து வரத்து அதிகமாக இருக்கும். அதனால் விலையும் குறைவாக இருக்கும். நகையை விற்றாவது இந்த மாதத்தில் வந்து மளிகை பொருட்களை வாங்கி விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மிளகாய் நிலவரம்:
வடமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், மிளகாய், தனியா ரகங்கள் அதிகளவு குவிந்துள்ளன.சென்னை கொத்தவால்சாவடியில் மிளகாய், தனியா வகைகள் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன. ராஜஸ்தான், ம.பி.,யில் இருந்து வந்துள்ள தனியா, 60 – 70 ரூபாய் வரை விற்பனையாகிறது.
விலை நிலவரம் குறித்து டி.ராஜேந்திரன் கூறியதாவது: புளி ரகத்தில் கரிப்புளி, 175 – 185 ரூபாய்; பிளவர் புளி, 110 – 115 ரூபாய்; தோசைப்புளி, 105 –110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பூண்டு, 1 கிலோ, 22 – 65 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ளது. பழைய மிளகாய், 1 கிலோ, 125 – 135 ரூபாயிலும், புதியது, 160 – 210 ரூபாயிலும் குண்டூரில் இருந்து வந்துள்ளது. நீள மிளகாய் ஒரு கிலோ, 100– 103 ரூபாய்க்கு உள்ளது. சேலம், ஈரோட்டில் இருந்து வந்துள்ள மஞ்சள், 1 கிலோ, 90 – 120 ரூபாய்க்கு கிடைக்கும்.