இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன்
இந்திய விஞ்ஞான உலகின் மிக முக்கியமான ஆளுமை நம்பி நாராயணனன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து அப்துல் கலாமுடன் ராக்கெட் வடிவமைப்பு பிரிவில் பணியாற்றினார்.
1994ம் ஆண்டு ராக்கெட் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டார். இந்த செய்தி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் விஞ்ஞானி சசிகுமாரனும் கைது செய்யப்பட்டர்.
வழக்கை விசாரித்த சி.பி.ஐ, இருவரும் குற்றமற்றவர்கள் என்று அறிவித்தது. 1996ம் ஆண்டு இருவரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. தன் மீது பொய்யான வழக்கு போட்டு கொடுமைப்படுத்திய போலீஸ் மீது நம்பி நாராயணன் வழக்கு போட்டார். 23 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
தன் வாழ்க்கையை போராட்டமாகவே அமைத்துக் கொண்ட நம்பி நாராயணனின் வாழ்க்கை சினிமாவாகிறது. இதில் நம்பி நாராயணனாக மாதவனும், அவரது சக விஞ்ஞானி சசிகுமாரனாக டோனி பட புகழ் சுஷாந்தும் நடிக்கிறார்கள்.
ஹிந்தியில் தயாராகும் படம் தமிழ், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது. நம்பி நாராயணன் எழுதிய ரெடி டூ பயர் என்ற சுயசரிதை புத்தகத்தை தழுவி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் மாகாதேவன் இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.