ஜில்லென்ற விலையில் சுவையான பழங்கள்
சென்னை : குளிர்ச்சி தரும் பழங்கள் ஜில்லென்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.
கோடை துவங்கி உள்ள நிலையில், குளிர்ச்சி தரும் பழங்களான கிவி, அத்தி, கிர்ணிபழம், தர்பூசணி ஆகியவற்றின் விற்பனை, சென்னையில் களைகட்டியுள்ளது. வெயில் காலத்தில் உடலுக்கு வைட்டமின், சி சத்து அதிகம் தேவைப்படும். இந்த வேளையில் நம் உணவில் சரிபாதி பழங்களை உணவாக எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
பழங்களின் அதிகப்படியான விலையை காரணம் காட்டி, வாங்க முடியவில்லையே என வருத்தப்பட தேவையில்லை. தற்போது, குளிர்ச்சி தரும் பழங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ கிவி பழம், 100 – 120 வரை விற்பனையாகிறது.
கிர்ணி பழம், ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அத்திப் பழம் ஒரு பெட்டி, 50 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது
வாழை விலை அதிகரிப்பு:
கடந்தாண்டை காட்டிலும், செவ்வாழை பழம் கிலோவுக்கு, 25 ரூபாய் விலை ஏறியுள்ளது. தமிழக உற்பத்தி குறைந்ததாலேயே விலை ஏறியுள்ளதாக, பல்லாவரத்தை சேர்ந்த வாழை வியாபாரி, ஹரிஹரன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் வாழை உற்பத்தி குறைந்து விட்டது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான், பழங்கள் இறக்குமதியாகின்றன. செவ்வாழை பழம் ஒரு கிலோ, 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எலக்கி, 45 ரூபாய்; கற்பூர வாழை, 35 ரூபாய் மலை வாழை, 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது’ என்றார்.