அமெரிக்காவின் வரி உயர்வால் இறால் ஏற்றுமதி லாபம் குறையும்
மும்பை : அமெரிக்கா, சமீபத்தில், இந்திய இறால்கள் இறக்குமதிக்கு விதித்த, அதிக பொருள் குவிப்பு வரியை, 0.84 சதவீதத்தில் இருந்து, 2.34 சதவீதமாக உயர்த்திஉள்ளது.
‘இதனால், இந்திய இறால் ஏற்றுமதியாளர்களின் லாப வரம்பு குறையும்; வரி உயர்வு, இறால் பண்ணைகள் அல்லது விவசாயிகள் மீது சுமத்தப்படும்’ என, ‘இக்ரா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இறால் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு, 32 சதவீதமாக உள்ளது.கடந்த ஆண்டு, வியட்னாம், சீனா, தாய்லாந்து நாடுகளில், இறால் உற்பத்தி குறைந்தது. இதனால், அமெரிக்காவிற்கான இந்தியாவின் இறால் ஏற்றுமதி, 45 சதவீதமாக உயர்ந்தது.நடப்பு, 2017- – 18ம் நிதியாண்டில், ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவின் இறால் ஏற்றுமதி, 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் இறால் ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில் வியட்னாமிற்கான இந்தியாவின் இறால் ஏற்றுமதி, 26.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது.