ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின், ஜடேஜாவுக்கு தொடர் ஓய்வு ஏன்?: பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம்
மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி, வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
முன்னதாக முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக சமீபத்தில் நடந்த வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரிலும் அவர்கள் விளையாடவில்லை. எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவின் இந்த நடவடிக்கை பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்ட சிலரோ, இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், இதன் காரணமாகதான் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அனைத்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடர்களிலும் விளையாடுவதில்லை என்றும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘’அனைத்து நேரங்களிலும் அஸ்வின், ஜடேஜாவுடன் விளையாட முடியாது. உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால், அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்ப போதுமான கால அவகாசம் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்குதான் அதிக முக்கியத்துவம்’’ என்றார்.