‘வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்’
புதுடில்லி : ‘வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு உதவ, தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்’ என, பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியா – 2022’ என்ற திட்டத்தில், 200 தலைமை செயல் அதிகாரிகள் இடம் பெற்ற, 6 குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுவினர், பிரதமர் மோடியிடம் தெரிவித்த கருத்துக்களை, ‘நிடி ஆயோக்’ டுவிட்டரில் வெளியிட்டு உள்ளது.
அதன் விபரம்: பத்து கோடி விவசாயிகளுக்கு உதவ, 10 லட்சம் வேளாண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும். வேளாண், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க, தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்த, அவர்களுக்கு துணை வருவாய் அளிக்கும் தொழில்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இக்குழுக்கள், நாளைய நகரங்களை வடிவமைப்பது; வேலைவாய்ப்புகளை உருவாக்குவது; விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது; வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை தொடர்பான பரிந்துரைகளை, ‘நிடி ஆயோக்’ அமைப்பிற்கு வழங்கும்.