Seine et Marne தாக்குதல்! - மேலும் ஐவர் உயிர் ஆபத்தில்..!!
திங்கட்கிழமை இரவு Sept-Sorts பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தக்குதலில் காயமடைந்த 13 பேரில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதோடு, 13 பேர் காயமடைந்தனர். அவர்களில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஐவரின் நிலை மிக மோசமாகவும் உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிறுமியின் 3 வயது சகோதரன் ஒருவன் மிக மோசமாக காயங்களுக்கும் எலும்பு முறிவுகளுக்கும் ஆளானதாக அறிவிக்கப்படுள்ளது. குறித்த சிறுவன் பரிசின் Necker மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
தாக்குதல் நடத்திய நபர் உடனடியாக ஜோந்தாமினர்களால் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். புலனாய்வு துறையினருக்கு முன்னதாக குறித்த தாக்குதல் தாரி அறிமுகமாகியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.