2 பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
2 பிள்ளைகளின் தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!

2 பிள்ளைகளின் தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
 
கிளிநொச்சியில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சியில் வேலுப்பிள்ளை சிவரூபன் என்பவர் போத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது சடலம் கல் ஒன்றில் கட்டி கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது.
 
இந்த கொலையை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் கரிகரன், தங்கராஜா இராஜேந்திரன் (ராசா) ஆகிய இருவரும் மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்கள் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் மன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
வேலுப்பிள்ளை சிவரூபனை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் எதிகள் இருவருக்கு எதிராகவும் தண்டனைச் சட்டக் கோவை 296ஆம் பிரிவின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றில் 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
 
“இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டை வழக்குத் தொடுனரால் நிரூபிக்கமுடியவில்லை. அதனால் இரண்டாம் எதிரியை மேல் நீதிமன்றம் விடுவித்தது.
 
முதலாம் எதிரி மீதான குற்றம் கண்கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படாவிடினும் சந்தர்ப்ப சூழல் சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் கொலை செய்யும் பொது நோக்கோடு வேலுப்பிள்ளை சசிரூபனை கொலை செய்தார் என இனங்கண்டு முதலாம் எதிரியைக் குற்றவாளியாக நீதிமன்று அறிவிக்கிறது.
 
கொலைக் குற்றத்துக்காக ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும் திகதியில் நிர்ணயிக்கப்படும் இடத்தில் குற்றவாளியின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு இந்த மன்று பரிந்துரைக்கிறது" என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
 
 

மூலக்கதை