திவால் சட்டத்திருத்தம்; அவசர சட்டத்திற்கு ஒப்புதல்
புதுடில்லி : ‘‘திவால் சட்டத்திருத்தம் தொடர்பான அவசர சட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது,’’ என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
வாராக்கடனுக்காக, பல நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் விற்பனைக்கு வரும் போது, வாங்குவோர் குறித்து, திவால் சட்டத்தில் எந்த வரையறையும் செய்யப்படவில்லை. இதனால், திவால் நிறுவனத்தை, அதன் நிறுவனரே, குறைந்த விலையில் மீண்டும் வாங்கும் சாத்தியம் உள்ளது. இதை தடுக்க, ‘திவால் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என, 14 உறுப்பினர்கள் கொண்ட குழு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
இதையேற்று, திவால் நிறுவனத்தை, பணம் இருந்தும் வேண்டுமேன்றே கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்த நிறுவனர்கள், மோசடி வழக்கில் சிக்கிய நிறுவனர்கள் ஆகியோர் வாங்க தடை செய்யும் விதி, திவால் சட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. ‘திவால் சட்டத்திருத்தம் தொடர்பான அவசர சட்டத்திற்கு, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படும்’ என, அருண் ஜெட்லி தெரிவித்தார்.