முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி!

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.
 
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தற்போது விளையாடி வருகிறது. 
 
இதில் அபுதாபியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை குறைந்த வெற்றி இலக்கையும் எடுக்க விடாமல் நசுக்கிய இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், உலகிலேயே முதன்முதலாக 400 விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைக்க முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது.
 
இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் இரண் டாவதும் கடைசியுமான டெஸ்ட்போட்டி இன்று பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
 
இலங்கை அணி முதன் முதலாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால் இலங்கை கிரிக்கெட்டிற்கு இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க போட்டியாக அமையவுள்ளது.
 
மேலும் முதல் போட்டி யில் வெற்றிபெற்றதன் மூலம் அபுதாபியில் பாகிஸ்தானை வீழ்த்திய முதல் அணி இலங்கை என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றது.
 
138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய – -நியூஸி லாந்து அணிகள் விளையாடியிருந்தன. 
 
2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. இப்போட்டியை 47,441 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். 
 
பிங்க் நிற பந்தில் முதல் விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற பெருமையை ஆஸி.யின் ஹசல்வுட் பெற்றார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி ஆஸி.யின் அடிலெய்டு மைதானத்தில் இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டமாக நடைபெற்றது. 
 
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் – இங்கிலாந்து ஆகிய அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதியிருந்தன.
 
இதன் தொடர்ச்சியாக இலங்கை அணி தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியில் களம் காண்கிறது. பாகிஸ்தான் அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளதால் பிங்க் நிற பந்து குறித்த அனுபவம் அவர்களுக்கு நிறையவே இருக்கும்.
 
ஆனால் இலங்கை அணி முதன்முறையாக பிங்க் நிற பந்தில் விளையாடவுள்ளது.
 
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
 
அத்தோடு இலங்கை அணியின் துருப்புச் சீட்டாக உள்ள ரங்கன ஹேரத் இந்தப் போட்டி யிலும் தனது மந்திரச் சுழலில் பாகிஸ்தானை திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
டுபாயில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணியைப் பொறுத்தவரையில் வெற்றித் தெம்பில் இருக்கிறது. அதனால் இந்தப் போட்டியில் புது நம்பிக்கையுடன் களமிறங்கும்.
 
ஆனால் அபுதாபியில் முதன்முறையாக தோற்றுள்ள பாகிஸ்தான் அணியோ இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமநிலையில் முடிக்கும் முனைப்போடு களமிறங்கும். பொறுத் திருந்து பார்ப்போம் ஐந்தாம் நாளில் போட்டி யார் பக்கம் திரும்புகின்றது என்று.

மூலக்கதை