‘ஸ்மார்ட் போன்’ வணிகத்தில் பங்கு; கூகுள் – எச்.டி.சி., ஒப்பந்தம்
புதுடில்லி : தைவான் நாட்டைச் சேர்ந்த, எச்.டி.சி., நிறுவனத்தின், ‘ஸ்மார்ட் போன்’ வணிகத்தின் ஒரு பகுதியை, வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, ‘கூகுள்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, எச்.டி.சி., நிறுவனத்துக்கு, கூகுள், 7,050 கோடி ரூபாயை, ரொக்கமாக வழங்க இருக்கிறது.மேலும், ‘கூகுள் பிக்ஸல் ஸ்மார்ட் போன்’ தயாரிப்பில் பணியாற்றி வரும், எச்.டி.சி., பணியாளர்கள், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றை பகிர்வது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், எச்.டி.சி., நிறுவனத்துக்கு, நிதி வசதி, செயல்பாட்டு திறன் போன்றவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளை பொறுத்தவரை, திறன்மிகு தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். ‘கூகுள் பிக்ஸல்’ தயாரிப்புக்கு, எச்.டி.சி.,யின் அறிவுசார் சொத்துரிமையை எளிதாக அணுக இயலும். நடைமுறைகளை முடித்து, 2018 துவக்கத்தில், ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘இந்த ஒப்பந்தமானது, கூகுள் நிறுவனத்தின் வன்பொருள் வணிகத்துக்கு உரமூட்டுவதாகவும், எச்.டி.சி., ஸ்மார்ட் போன் மற்றும் மெய்நிகர் சாதனங்கள் தயாரிப்பில், புதுமைகள் தொடரவும் உதவும்,’’ என, எச்.டி.சி., நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான, செர் வாங் தெரிவித்து உள்ளார்.