பிராந்தியத்தின் கேந்திரமாக சிறிலங்கா! கண் வைக்கும் அமெரிக்கா
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகள் விரிவுபடுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்ட போதும், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
அமெரிக்காவின் புதிய நிர்வாகம், பல்வேறு வர்த்தக உடன்பாடுகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. முக்கியமாக, ட்ரான்ஸ் பசுபிக் ஒத்துழைப்பு உடன்பாட்டைக் குறிப்பிடலாம்.
இருந்தாலும், சிறிலங்காவுடனான இருதரப்பு வர்த்தகம் அல்லது முதலீட்டு வரைவு உடன்பாடு தொடர்பான கொள்கைகளில் எந்த மாற்றங்களும் இடம்பெறும் என்று நான் நினைக்கவில்லை.
சிறிலங்காவுக்கு இது முக்கியமான தருணம். பிராந்தியத்தின் கேந்திரமாக மாறி வருகிறது. அமெரிக்கா ஒரு பாரிய ஏற்றுமதிச் சந்தையாக சிறிலங்காவுக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.