பிளிப்கார்ட் போட்டியை சமாளிக்கஅமேசான் தொடர்ந்து முதலீடு
புதுடில்லி:உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான, அமேசான், இந்தியாவில், தொடர்ந்து முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடுகள், இந்திய சந்தையில் நிறுவனத்தை தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் வலுவானதாக மாற்ற பயன்படுத்தப்படும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அதன் நிறுவனருமான, ஜெப் பிசோஸ் கூறியதாவது:இந்தியாவில் எங்கள் நிறுவனம் மிக விரைவான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்திய டீம் மிக வேகமாக செயல்படுகிறது. விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு விரைவான வினியோகத்தை வழங்குகிறது. இந்தியாவில் மின்னணு வர்த்தகம் துவங்கிய நாள் முதலே, அமேசான் இருந்து வருகிறது. தொழில்நுட்பம், உள்கட்டுமானம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்து வருவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.பிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, அமேசானுக்கு இந்த முதலீடுகள் உதவிகரமாக இருக்கும் என, கருதப்படுகிறது. அண்மையில் அமேசானின் போட்டியை சமாளிக்க, பிளிப்கார்ட், 1.4 பில்லியன் டாலர் நிதியை திரட்டியது குறிப்பிடத்தக்கது.