மகிழுந்து ஏற்றி கொல்லப்பட்ட CRS பெண் அதிகாரி! - கொலையாளி தப்பி ஓட்டம்!!
CRS பெண் அதிகாரி ஒருவரை இடித்து கொன்றுவிட்டு மகிழுந்து ஒன்று தப்பிச் சென்றுள்ளது. அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு Essonne இன் Massy பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடை பயிற்சி மேற்கொண்டிருந்த CRS படை பெண் அதிகாரி ஒருவரை வேகமாக வந்த மகிழுந்து ஒன்று மோதியுள்ளது. காவல்துறையினர் தெரிவிக்கும் போது, குறித்த பெண் அதிகாரி 40 மீட்டர்கள் நீளம் வரை வீதியில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது குறித்த அதிகாரி கடமையில் இல்லை எனவும், சாதாரண உடையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்கினார். அதன்படி, சிறிய வகை சாம்பல் நிறமுறைய மகிழுந்து ஒன்று உச்ச வேகத்தில் வந்து இடித்துவிட்டு வேகமாக சென்றது எனவும், 40 மீட்டர்கள் நீளம் வரை அதிகாரி இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மகிழுந்தில் இலக்கத்தகடு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த மகிழுந்தை ஓட்டிச்சென்ற சாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.