பரிஸ் - காவல்நிலையம் முன் ஆசிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!
காவல்துறையினரின் விசாரணைகளின் போது உயிரிழந்த நபர் ஒருவருக்காக, நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிசில் காவல்துறையினரை தாக்க வந்த நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் வாசகர்கள் அறிந்ததே. அதைத் தொடர்ந்து குறித்த நபருக்கு ஆதரவு தெரிவித்தும், காவல்துறையினருக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றது. 19 ஆம் வட்டார காவல்நிலையம் முன்பு அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. காவல்நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் கண்காணிப்பு வாகனம் ஒன்றினது கண்ணாடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்தனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.
ஞாயிற்றுக்கிழமை rue d'Aubervilliers இல் உள்ள கொல்லப்பட்ட நபர் காவல்துறையினருக்கு அழைத்தது ஏன் எனவும், காவல்துறையினரை கத்தி மூலம் தாக்கியது ஏன் எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிய நாட்டைச் சேர்ந்த நபரே கொல்லப்பட்டதாகவும், நேற்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஆசிய அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.