பிரபலங்களை ஆட்டிப்படைத்த சினிமா பைனான்சியர் கைது

தினமலர்  தினமலர்
பிரபலங்களை ஆட்டிப்படைத்த சினிமா பைனான்சியர் கைது

சென்னை: கந்து வட்டி தொழிலில் கொடி கட்டிப்பறந்த, பிரபல சினிமா பைனான்சியர், முகுந்த் சந்த் போத்ரா, தன் இரு மகன்களுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை, தி.நகரை சேர்ந்தவர், செந்தில் க.கணபதி. தொழில் அதிபரான இவர், அதே பகுதியில் பி.ஆர்.சி., இன்டர்நேஷனல் ஓட்டல் பி.லிட் என்ற பெயரில், ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், தி.நகர் விஜய ராகவா சாலையில் வசித்து வரும், பிரபல சினிமா பைனான்சியர், முகுந்த்சந்த் போத்ரா, 57, மற்றும் அவரது மகன்கள், சந்தீப் போத்ரா, 25 ககன் போத்ரா, 33 ஆகியோரிடம், ஓட்டல் தொழிலை விரிவுப்படுத்த, 83.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதற்கு, வட்டியாக, முகுந்த் சந்த் போத்ராவின் வங்கி கணக்கிற்கு, நான்கு லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.

பின், 2016ல் இருந்து, இதுவரை, பல தவணைகளில், பல லட்சம் ரூபாயை வட்டியாக செலுத்தி வந்துள்ளார். ஆனால், முகுந்த் சந்த் போத்ராவும், அவரது மகன்களும், பத்து நாளைக்கு ஒருமுறை கூட்டு வட்டியாக சேர்த்து, 4.24 கோடி ரூபாய் தர வேண்டும் என, மிரட்டி உள்ளனர். தர மறுத்தால், கூலிப்படையை ஏவி கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும், செந்தில் க.கணபதிக்கு சொந்தமான, ஓட்டலின் கட்டடம் மற்றும் இடத்தை அபகரிக்க, விற்பனை பத்திர ஒப்பந்தம் போட்டு, 98 சதவீதம் பணம் கொடுத்து விட்டதாகவும், மீறி யாராவது வாங்கினால், ஆவணங்கள் செல்லாது என, பத்திரிகைளில் விளம்பரம் செய்தும், செந்தில் க.கணபதியை மிரட்டி உள்ளனர்.

இது தொடர்பாக அவர், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய கந்து வட்டி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, முகுந்த்சந்த் போத்ரா மற்றும் அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ராவை நேற்று கைது செய்தனர்.

நடிகர், நடிகையரை ஆட்டிபடைத்தவர் : முகுந்த் சந்த் போத்ரா குறித்து போலீசார் கூறியதாவது: சவுகார்பேட்டையில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த முகுந்த் சந்த் போத்ரா, சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையரை அணுகி படம் எடுக்க, கடனாக, பல லட்சம் ரூபாய் கொடுப்பார். பின், அந்த படம் ரிலீஸ் செய்யும் நிலைக்கு வரும் போது திடீரென, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெறுவார். பின், அவர்களிடம், கந்துவட்டியாக பல கோடி ரூபாய் வசூலிப்பார். இதேபோல், நடிகர் ரஜினி சம்மந்தி கஸ்துாரிராஜா உள்பட, பல சினிமா பிரபலங்களை ஆட்டிப்படைத்து உள்ளார். இவரால் அழிந்த குடும்பங்கள் ஏராளம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மூலக்கதை