பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

PARIS TAMIL  PARIS TAMIL
பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

 இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வீழ்த்தியது.

 
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 91 ரன்களும், விராத் கோலி 81 ரன்களும், ஷிகர் தவான் 68 மற்றும் யுவராஜ் சிங் 53 ரன்களும் எடுத்தனர். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பிய ஹர்திக் பாண்ட்யா 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.
 
எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் போட்டியில் மூன்று முறை மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 289 இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அசார் அலி, ஷேக்‌ஷாத் பேட்டிங் செய்தனர். ஆட்டத்தில் ஐந்தாவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் போட்டி தொடங்கியது. அப்போது, 41 ஓவர்களில் 289 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
ஆட்டத்தின் 9வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஷேக்‌ஷாத் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் தொடக்க வீரர் அசார் அலி மட்டுமே 50 ரன்கள் அடித்து ஜடேஜா பந்தில் அவுட் ஆனார். சில கேட்ச்களை இந்திய வீரர்கள் தவற விட்டாலும், பாகிஸ்தான் வீரர்களை ரன் எடுக்க விடாமல் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். ஹபீஸ் மற்றும் மாலிக் சிறிது நேரம் நின்று சமாளித்தனர். ஆனால், அவர்களையும் ஜடேஜா வெளியேற்றினார். கடைசியாக களமிறங்கிய வீரர்களை ஹர்திக் பாண்டியா மற்றும் உமேஷ் யாதவ் வெளியேற்ற இந்தியாவின் வெற்றி உறுதியானது.
 
35வது ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைகளின் படி 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மூலக்கதை