ரூ.300 கோடியில் தொழிற்சாலை; யு.எஸ்.ஜி., போரல் அமைக்கிறது
புதுடில்லி : யு.எஸ்.ஜி., போரல் நிறுவனம், கட்டுமான பொருட்கள்தயாரிப்புக்கு தேவையான, தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், தென்னிந்தியாவில் கட்டுமான பணிகளில் பயன்படுத்தக் கூடிய, ‘பிளாஸ்டர்போர்ட்’ தயாரிக்கும் தொழிற்சாலையை, 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுசிக் சங்கர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மூன்று கோடி சதுர அடியில், புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. இதற்காக, தென்னிந்தியாவில் உள்ள, மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. புதிய ஆலை உள்ளிட்ட பணிகளுக்கு, 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. அதில், 100 கோடி ரூபாய், ஏற்கனவே உள்ள இரு ஆலைகளை நவீனப்படுத்தும் பணிக்கு செலவிடப்படும். புதிய ஆலையின் மூலம், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், நிறுவனத்தின் விற்பனையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.