'பாகுபலி 2' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

தினமலர்  தினமலர்
பாகுபலி 2 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்த 'பாகுபலி 2' ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மூன்று வாரங்களைக் கடந்தும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூலும் 1500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

இப்படம் பற்றி தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகிறார்கள். தென்னிந்தியாவிலும் அந்தந்த மாநில மொழிப் படங்களை விடவும் இப்படம் அதிகமான வசூலைக் குவித்து வருகிறது. ஹிந்தியில் நேரடி ஹிந்திப் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்படம் பற்றி முக்கிய பாலிவுட் ஹீரோக்கள் யாரும் இதுவரை பாராட்டு தெரிவிக்காமல் இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர்களுடைய முந்தைய வசூல் சாதனைகளை 'பாகுபலி 2' முறியடித்ததே அதற்குக் காரணம் எனப் பேசப்படுகிறது.

'பாகுபலி 2' படத்திற்கு புதிய பாராட்டாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு கிடைத்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு இப்படத்தைப் பாராட்டி முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார் ரகுமான். அதில், “ராஜமௌலி காரு, கீரவாணி காரு, மற்றும் 'பாகுபலி 2'வின் அனைத்து குழுவினருக்கும்... சென்னையில் இப்போதுதான் படத்தைப் பார்த்து முடித்தேன். பாக்ஸ் ஆபீஸில் இப்படம் 2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறேன். தென்னிந்திய மொழிப் படங்களுக்கு உலக அளவிலான வாசனை வெள்ளமென திறந்திருக்கிறீர்கள், அதோடு தனி அடையாளத்தையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்,” எனப் பாராட்டியுள்ளார்.

ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமௌலி, “மிக்க நன்றி சார், உங்களது பாராட்டு சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை