வங்கதேசத்தில் வன்முறை இந்து கோயில்கள் சேதம்
டாக்கா, - வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகள் சூறையாடப்பட்டதில் பலர் காயம் அடைந்தனர்.
வங்கதேசத்தில் உள்ள பிரம்மபார்கியா மாவட்டம், நசிர் நகரை சேர்ந்தவர் ராஸ்ராஜ் தாஸ். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மற்றொரு மதத்தை விமர்சித்து எழுதியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் நசிர் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
மதாப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 2 இந்து கோயில்களை சிலர் சேதப்படுத்தினர். இதுமட்டுமின்றி, துட்டுபார்கி, நமஷூத்ரபர்கா, கோஷ்பர்கா ஆகிய இடங்களில் உள்ள இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.
அங்கிருந்த அர்ச்சகர்கள் தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. வன்முறையை தூண்டியதாக ராஸ்ராஜ் தாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதத்தை விமர்சித்தது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு நடந்த வன்முறையில் புத்த கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.