இலங்கை: கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு

BBC  BBC
இலங்கை: கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அடுத்து பிள்ளையான் என அழைக்கப்படும் சிவசேநதுரை சந்திரகாந்தன் 10 மாதங்களுக்கும் மேலாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் இதே நாளில் அக்டோபர் மாதம் 11ம் தேதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய சந்தேக நான்கு பேரும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்பின், விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேரையும் எதிர்வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி மா. கணேசராசா உத்தரவு பிறப்பித்தார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, முன்னாள் உறுப்பினரான கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றியதாக கூறப்படும் எம். கலீல் ஆகியோரை குற்றப்புலனாய்வு துறையினரால் ஏனைய சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்தனர்.

கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இப்படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்த போதிலும் கடந்த வருடம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரே குற்றப்புலனாய்வு துறையினரால் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரனை அடுத்த மாதம் 4ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

மூலக்கதை