இந்தோனேசியாவில் மதப்பள்ளி இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த மதப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மதப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத வழிபாடு (தொழுகை) செய்துகொண்டிருந்தனர். அப்போது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மத வழிபாடு செய்துகொண்டிருந்த மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கடந்த 5 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இடிபாடுகளில் சிக்கிய 104 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
