காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்த டிரம்ப்; இல்லையென்றால்...

  தினத்தந்தி
காசா அமைதி ஒப்பந்தம்: ஹமாஸ் அமைப்புக்கு 5ந்தேதி இறுதி கெடு விதித்த டிரம்ப்; இல்லையென்றால்...

வாஷிங்டன் டி.சி.,ஹமாஸ் அமைப்பின் கொடூர தாக்குதலை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அவரை வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்து கைகுலுக்கி வரவேற்ற டிரம்ப், நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதுடன், போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான சாத்தியமும் அதிகரித்தது. காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்நிலையில், டிரம்ப் கடந்த செவ்வாய் கிழமை கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் என்றார். எனினும், இந்த திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார். அப்போது அவர், இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், டிரம்ப் நேற்று (வெள்ளி கிழமை) வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை (5-ந்தேதி) மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என அவருடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். காசா அமைதி திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. ஆனால், இதனை பரிசீலனை செய்த பின்னரே முடிவுக்கு வர முடியும் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.

மூலக்கதை