காதலனுடன் மீண்டும் சேர ஆசை: திருமணமான 2-வது வாரத்தில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற இளம்பெண்

  தினத்தந்தி
காதலனுடன் மீண்டும் சேர ஆசை: திருமணமான 2வது வாரத்தில் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற இளம்பெண்

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகதி யாதவ் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் அனுராக் யாதவ் (வயது 26). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என முடிவு செய்தனர். பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்தநிலையில், பிரகதியின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரகதிக்கு அவசர அவசரமாக வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். கடந்த 5-ம் தேதி பிரகதியை அதே பகுதியை சேர்ந்த திலிப் (வயது 26)என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் பிரகதியால் அவருடைய காதலனை மறக்க முடியவில்லை.எப்படியாவது கதலனுடன் மீண்டும் சேர வேண்டுமென துடிதுடித்து வந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் அவருடைய காதலன் அனுராக் யாதவிடம் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். கணவர் திலீப்பை கொலை செய்துவிட்டால் காதலருடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என பிரகதி நினைத்தார். இது குறித்து அவருடைய காதலன் அனுராக் யாதவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து கூலிப்படையை சேர்ந்த ராமாஜி என்பவரை தொடர்பு கொண்டார். அவர் திலீப்பை கொலை செய்ய ரூ.2 லட்சம் கேட்டார். அதன்படி பிரகதி ரூ.2 லட்சம் கொடுத்தார்.கடந்த 19-ம் தேதி ராமாஜி அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து பைக்கில் சென்று கொண்டிருந்த திலீப்பை மடக்கி சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த திலீப் சரிந்து விழுந்தார்.உடல் முழுவதும் ரத்த காயங்கள் துபாக்கி குண்டு பாய்ந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டபடி திலிப் துடிதுடித்து கொண்டிருந்தார். கூலிப்படையினர் அவரை அங்குள்ள விவசாய நிலத்தில் தூக்கிவீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலீப்பை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலீப்பை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம் கூலிப்படை தலைவன் ராமாஜியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பிரகதி அவருடைய காதலன் அனுராக் யாதவ், கூலிப்படை தலைவன் ராமாஜி ஆகிய3 பேரை கைது செய்தனர். மேலும் கூலிப்படை பயன்படுத்திய 2 துப்பாக்கி, 4 தோட்டா, ஒரு பைக், 2 செல்போன்கள் மற்றும் ஒரு ஆதார் அட்டை, ரூ,3000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் எந்த தவறூம் செய்யாத கணவரை கூலிப்படை ஏவி இளம்பெண் கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை