பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

தினமலர்  தினமலர்
பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு



பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பெஷாவர் நகரில், பல அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கூடிய ஒரு மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகை நடைபெற்றது.

இதில், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௬௧ பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஏராளமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடும் சேதமடைந்தது.

இதையடுத்து, அங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏராளமானோர் மீட்கப்பட்டு வருகின்றனர். இதில், பலர் இறந்துவிட்டதால், நேற்று வரை பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

பலத்த காயமடைந்த ௨௨௧ பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில், மசூதியின் இமாமும் கொல்லப்பட்டார். இது குறித்து, அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு, பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும், தெஹ்ரீக் தலிபான் பாகிஸ்தான் என்ற அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மசூதியில், போலீசார், பாதுகாப்புப் படையினர் முன்வரிசையில் இருந்து தொழுகை நடத்தினர். இவர்களுக்கு முன்னதாகவே சென்று, சந்தேகத்துக்குரிய மனித வெடிகுண்டு நபர் நின்றுள்ளார். அங்கிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்ததால், ஏராளமான போலீசார், பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர்.குண்டு வெடிப்பிற்குப் பின் சந்தேகத்துக்குரிய நபரின் தலை மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ''பலத்த பாதுகாப்பு உள்ள இந்த மசூதிக்குள், மர்ம நபர் போலீஸ் அதிகாரிகளின் வாகனத்தை பயன்படுத்தி நுழைந்திருக்க வேண்டும்,'' என, போலீஸ் அதிகாரி முகம்மது அஜிஸ் கான் தெரிவித்தார்.



பெஷாவர் பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில்,நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை