பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்

தினமலர்  தினமலர்
பதக்கத்தை நாட்டிற்கு சமர்ப்பணம்: ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் உருக்கம்

டோக்கியோ: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு, நனவாகி உள்ளது. பதக்கத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன் என, பளுதூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு தெரிவித்து உள்ளார்.


ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 87 கிலோ, 'கிளீன் அன்ட் ஜெர்க்' பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம்.



இந்த வெற்றி தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது:


ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகி உள்ளது. என்னுடைய இந்த பதக்கத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்து எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.


என்னுடைய குடும்பத்திற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக எனது தாயார், எனக்காக ஏராளமான தியாகங்களை செய்துள்ளார். என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார்.



எனக்கு ஆதரவு அளித்த இந்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் அமைப்பு, இந்திய பளுதூக்குதல் அமைப்பு, ரயில்வே, என்னுடைய ஸ்பான்சர்கள், என்னுடைய மார்க்கெட்டிங் நிறுவனம் ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.



என்னுடைய பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு சிறப்பு நன்றியும், எனது குழுவினரின் கடின உழைப்பு, ஊக்கம், பயிற்சி ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த பளுதூக்கும் பிரிவினருக்கும் என்னுடைய தேசத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.


மூலக்கதை