இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை: பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு
மணிலா: கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு, ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்து உள்ளது.
இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்ததால், இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன. தங்களது நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்து உள்ளதாவது: கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையின் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாள்களுக்கு உள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.