குல்பூஷண் ஜாதவ் வழக்கு : அவசர சட்டம் நீட்டிப்பு
இஸ்லாமாபாத் :இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் அவசர சட்டத்தை, மேலும், நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்து உள்ளது.உளவு பார்த்ததாக, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ள, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.
தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட, சர்வதேச நீதிமன்றம், மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியது.
அதன்படி, குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டம், பாகிஸ்தான் பார்லி.,யில் நிறைவேறியது.
அதன் கால அவகாசம், செப்., 17 உடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து, அவசர சட்டத்தை மேலும், நான்கு மாதங்கள் நீட்டிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.