பாலியல் பலாத்கார புகார் முன்னாள் அமைச்சர் கைது

தினமலர்  தினமலர்
பாலியல் பலாத்கார புகார் முன்னாள் அமைச்சர் கைது

லண்டன்; பிரிட்டன் முன்னாள் அமைச்சர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான, கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.முன்னாள் அமைச்சரும், ஆளும் கட்சியின் பார்லிமென்ட் உறுப்பினராகவும் உள்ள ஒரு அரசியல் தலைவர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகார் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், கைது செய்யப்பட்டவரின் அடையாளத்தை, அதிகாரிகள் வெளியிடவில்லை.போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த ஜூலை, 31ம் தேதி, பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பாக, நான்கு புகார்களை, முன்னாள் அரசு பெண் ஊழியர் ஒருவர், எங்களிடம் அளித்துள்ளார். 2019 ஜூலை - 2020 ஜனவரி இடையில், இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அப்பெண் அளித்துள்ள புகார் அடிப்படையில், பார்லிமென்ட் எம்.பி., ஒருவரை நாங்கள் கைது செய்தோம்.எனினும், அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

இம்மாத மத்தியில், மீண்டும் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:இதுபோன்ற குற்றச்சாட்டுகளை, நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வோம். போலீசார் விசாரித்து வருவதால், இந்த விவகாரம் குறித்து, நாங்கள் கருத்து கூறுவது சரியாக இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை