பயணிகள் விமான போக்குவரத்துக்கு வான் எல்லையை திறந்து விட இந்தியாவுக்கு பாக். நிபந்தனை: போர் விமானங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
பயணிகள் விமான போக்குவரத்துக்கு வான் எல்லையை திறந்து விட இந்தியாவுக்கு பாக். நிபந்தனை: போர் விமானங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: ‘எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில் நிறத்தப்பட்டுள்ள போர் விமானங்களை வாபஸ் பெற்றால்தான், பயணிகள் விமான போக்குவரத்துக்கு எங்கள் நாட்டு வான்வழியை திறந்து விடுவோம்,’ என இந்தியாவிடம் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 40 பேரை கொன்றதற்கு பழி தீர்க்க, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இதனால், பாகிஸ்தான் வான்வழிப் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மூடப்பட்டது. இதனால், இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானமும், அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களும் நீண்ட தூரம் சுற்றி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிக எரிபொருள் செலவு ஏற்படுவதோடு, பயண நேரமும் அதிகரிக்கிறது. இதனால், ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை ரூ.430 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை இன்னும் பயணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை. இதனால், பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செயலாளர் நுஸ்ரத், ‘‘எல்லையில் உள்ள விமானப்படை தளங்களில், இந்தியா போர் விமானங்களை இன்னும் நிறுத்தி வைத்துள்ளது. அவற்றை முதலில் வாபஸ் பெற வேண்டும். அதுவரை பாகிஸ்தான் வான் எல்லையை, இந்திய விமான நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்,’’ என்றார். பாகிஸ்தான் அமைச்சரை தெறிக்க விட்ட நிருபர்கள்சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பேட்டியை வெளியிட்ட 3 டிவி சேனல்களின் ஒளிபரப்பை பாகிஸ்தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ‘ஊடக சுதந்திர பாதுகாப்பு’ என்ற கருத்தரங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கலந்து கொள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வந்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டு திணறடித்தனர்.கனடா பத்திரிக்கையாளர் எஸ்ரா லெவன்ட் கூறுகையில், ‘‘எனது டிவிட்டரில் வெளியிடப்பட்ட கருத்து நீக்கப்பட்டது. நான் கனடாவில் இருக்கிறேன். டிவிட்டர் அமெரிக்காவில் செயல்படுகிறது. ஆனால், எனது கருத்து பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற நபர்களை ஊடக சுதந்திரம் பற்றி பேச அழைத்ததற்காக, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்தான் சங்கடத்தை அனுபவிக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பற்றிய பேச்சில், நீங்கள் இரட்டை நிலையை கடைபிடிக்கிறீர்கள்,’’ என்றார். இந்த கேள்வியால் தர்மசங்கடத்துக்கு ஆளான அமைச்சர் குரேஷி, ‘‘உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது. ஆனால், நீங்கள் கேட்கும் விதம் சரியா என இங்குள்ளவர்களை கேளுங்கள். நாங்கள் ஊடகத்தை கட்டுப்படுத்தவில்லை. ஒழுங்கு முறை ஆணையத்துடன் ஏற்பட்ட பிரச்னையால் பாகிஸ்தானில் 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு 6 முதல் 8 மணி நேரம் தடைபட்டது. இப்போது, அந்த சேனல்கள் இயங்கி கொண்டிருக்கின்றன. ஊடகத்துக்கு வாய்பூட்டு போட்டது எல்லாம் அந்த காலம். சமூக ஊடகங்களில் தகவல் வெளியாவதை நீங்கள் நினைத்தாலும் முடக்க முடியாது,’’ என்றார்.

மூலக்கதை