ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

தினமலர்  தினமலர்
ஓட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை

லண்டன்: சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்ற முன்னாள் பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், ஓட்டலில் டீ சாப்பிடும் புகைப்படம் வெளியாகியது. இதையடுத்து பாக்., எதிர்கட்சிகள் நவாசை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70. ஊழல் வழக்கில் சிக்கிய இவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல, நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றார். லண்டனில் உள்ள மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில், தன் குடும்பத்தினருடன் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் நவாஸ் ஷெரீப், டீ சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, 'உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொய் தகவல்களை கூறி விட்டு, லண்டனில் சுற்றித் திரியும் நவாஸ் ஷெரீபை கைது செய்து அழைத்து வர வேண்டும். அவரை பாக்., சிறையில் அடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மூலக்கதை