கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு

தினமலர்  தினமலர்
கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பாகிஸ்தானில் மீண்டும் ஊரடங்கு

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும்' என, அந்நாட்டின் மூத்த சுகாதார அதிகாரியான சாபர் மிர்சா தெரிவித்துள்ளார்.



சாபர் மிர்சா தெரிவித்துள்ளதாவது:பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், பாதிப்புள்ள ஒரு சில பகுகளுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின், தேசம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கடந்த மாதத்தின் இறுதியில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், 'சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்' என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதை யாரும் முறையாகக் கடைபிடிக்க வில்லை. இதனால் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.



பாகிஸ்தானில் தற்போது, 56,349 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். 17,482 பேர் மட்டுமே பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,748 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனால், மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


'பாகிஸ்தானில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நிலை மேலும் கவலைக்குறியதாகும்' என, பொருளாதார வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். இருந்தும் உயிரிழப்புகளைத் தவிர்க்க ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை