அமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்

தினகரன்  தினகரன்
அமெரிக்கா ஆயுதங்களை விற்பதற்கு மாறாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம் : அதிபர் டிரம்பை விமர்சித்த பெர்னி சாண்டர்ஸ்

வாஷிங்டன்:  ‘‘அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பதற்கு மாறாக அந்நாட்டுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடலாம்’’ என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான  பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் குடியரசு கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் 50 மாகாணங்களில் கட்சி அளவில் தேர்தல் நடத்தி ேவட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களில் வெற்றி பெறும் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். நிவேடா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் பெர்னி சாண்டர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா வந்துள்ள அதிபர் டிரம்பை விமர்சித்து டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘இந்தியாவிற்கு அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் விற்கப்படும். இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்யப்படும்’’ என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பெர்னி தனது டிவிட்டர் பதிவில், “ரூ.21,300 கோடி மதிப்புக்கு ரேதியான், போயிங் மற்றும் லாக்ஹீட்  ராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு பதிலாக இந்தியாவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடலாம். இருநாடுகளும் இணைந்து காற்று மாசுவை ஒழிக்க பாடுபடலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பணிகளை உருவாக்கலாம் நமது கோள்களை பாதுகாக்கலாம்” என்று பதிவிட்டு இருந்தார்.

மூலக்கதை