பாகிஸ்தானில் பயங்கர விபத்து பஸ்-டீசல் லாரி மோதி 15 பேர் சாவு
கராச்சி:பாகிஸ்தானில் கடத்தல் டீசல் ஏற்றி சென்ற லாரியும், பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்சும் மோதி தீப்பிடித்ததில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது கில்லா சைபுல்லா பகுதி. இப்பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிரே ஈரான் கடத்தல் டீசலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதியதில் லாரியில் இருந்த டீசல் தீப்பிடித்தது. தீ பஸ்சுக்கும் பரவியதால் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதைதொடர்ந்து இரு வாகனங்களும் அங்கிருந்த கால்வாயில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் உள்பட 15 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். அப்போது பஸ்சில் இருந்து குதித்து குல்முகமது என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த 15 பேரின் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர்.