நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்காவில் சிகிச்சை?
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (69), ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த மாதம் 19ம் தேதி விமான ஆம்புலன்ஸ் மூலமாக நவாஸ் லண்டன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நவாஸ் மூளையின் ஒரு பகுதியில் ரத்தம் செல்வது தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்து அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை வசதியானது, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. எனவே நவாஸ், சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்த செல்லப்பட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற 16ம் தேதி விமான ஆம்புலன்ஸ் மூலமாக லண்டனில் இருந்து நவாஸ் அமெரிக்கா அழைத்து செல்லப்படலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.