கூகுளின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட் சிஇஓ ஆனார் சுந்தர் பிச்சை...தமிழருக்கு குவியும் வாழ்த்துக்கள்
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த ெபாறியாளர் சுந்தர் பிச்ைச, கோரக்பூர் ஐ. ஐ. டி. யில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் வார்டன் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்ற சுந்தர் பிச்சை, கடந்த 2004ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் என்பவர், அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அப்பதவிக்கு சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்காக கூகுளின் நிறுவனர்களுக்கு சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் தானியங்கி கார், வாழ்வியல் அறிவியல் என பல்வேறு சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கிய நிலையில், அத்தொழில்கள் அனைத்தும் அல்ஃபாபெட் என்ற நிறுவனத்தின் ஒரே குடையின் கீழ் 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது கூகுள் நிறுவனத்தை மட்டும் நிர்வகித்து வந்த சுந்தர் பிச்சை, தற்போது அக்குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் ஏற்க உள்ளார்.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் தலைமைப் பதவியில் தமிழர் ஒருவர் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூகுள் நிறுவன சிஇஓ பொறுப்புடன் கூடுதலாக அல்ஃபாபெட் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பையும் சுந்தர் பிச்சை கவனித்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போது, அல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.