அமெரிக்கா புதிய நிபந்தனை அரசு உதவி பெறுபவர்கள் கிரீன்கார்டு பெற முடியாது: இந்தியர்கள் பாதிக்கும் அபாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு உதவி பெறுபவர்கள் அல்லது உதவி பெற காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க மறுத்து டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிப்படைவார்கள்.அமெரிக்காவில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர்களுக்கு வழங்கும் எச்4 விசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம் ஆஜராகி விளக்கம் அளித்தது. அப்போது, இன்னும் 3 மாதத்தில் அந்த விசா வழங்குவது நிறுத்தப்படும் என உறுதியளித்தது. இதனால், அங்கு வசிக்கும் இந்தியர்களின் மனைவிகள் அதிகம் பேர் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த விதிமுறையில் கடந்த 21ம் தேதி உள்நாட்டு பாதுகாப்பு துறை கையெழுத்திட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உணவு மற்றும் பண உதவிகளை பெறுபவர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு அங்கு வசிக்கும் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.