அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறியரக விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் டேனலி தேசிய பூங்கா உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, பனிபடர்ந்த மலை பகுதியை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியை சுற்றிப்பார்க்க போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 4 பேர், விமானி உள்பட 5 பேர் சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த சமயத்தில் அதிக பனிப்பொழிவு இருந்தது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11,000 அடி உயரத்தில் விமானம் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது.
விமானம் விழுந்து நொறுங்கியதில் சுற்றுலா பயணிகள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விமானியின் நிலை குறித்து தெரியவில்லை. அவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.