வட ஐரோப்பிய நாடுகளில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு: ஜெர்மனியில் 330 விமானங்கள் ரத்து

தினகரன்  தினகரன்

பெர்லின்: வட ஐரோப்பிய நாடுகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பனி மழை கொட்டி வருகிறது. பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஜெர்மனியின் வர்த்தக நகரமான பிராங்பர்ட் விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் விமான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு 330 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.துசெல்ட்ரோப் விமான நிலையம் மாலையில் 4 மணி நேரம் மூடப்பட்டது. மேலும் வட மேற்கு ரின்- வெஸ்ட்பாலியா மாகாணத்தில் ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விமான ஓடு தளத்தில் பனி கொட்டிக் கிடந்ததால், இங்கிலாந்தில் 2-வது பெரிய நகரமான பிர்மிங்காமில் உள்ள விமான நிலையமும் நேற்று காலை விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அங்கு 30 ஆயிரம் பயணிகள் சிக்கி தவித்தனர். பனி காரணமாக லண்டனில் உள்ள லுப்தான் விமான நிலையத்தின் ஓடு தளமும் 2 மணி நேரம் மூடப்பட்டது. மாலையில் விமானங்கள் இறங்க மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதேபோன்று பிரான்சில் பல இடங்களில் கடும் குளிர் காற்று வீசுகிறது. 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

மூலக்கதை