கனடாவில் நடந்த இனவெறி தாக்குதல்!
கொலம்பியாவை சேர்ந்த குடும்பத்தார் ஸ்பானிஷ் மொழி பேசிய நிலையில் அவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் என நினைத்த நபர் ஒருவர் குடும்பத்தை அடிக்க பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்றாறியோவில் உள்ள ஒரு வாகனம் நிறுத்துமிடத்தில் கொலம்பியாவை சேர்ந்த மரி ஜம்பரனோ என்ற நபர் மனைவி செர்ஜியோ மற்றும் 13 வயதுடனான மகனுடன் நின்று கொண்டிருந்தார்.
குடும்பத்தார் தங்களுக்குள் ஸ்பானிஷ் மொழியில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அருகில் வந்த மார்க் பில்லிப்ஸ் (36) என்ற நபர் திடீரென அந்த குடும்பத்தை நோக்கி நீங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் தானே என கத்தியபடி தனது கையில் வைத்திருந்த பேஸ்பால் பேட்டால் தாக்க முயன்றுள்ளார்.
இதை செர்ஜியோ வீடியோவாக எடுத்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் ஸ்பானிஷ் மொழி பேசிய நிலையில் அதை பிரஞ்ச் என தவறாக புரிந்து கொண்ட மார்க் எங்களை நோக்கி ஐ.எஸ் என பலமாக தொடர்ந்து கத்தினார்.
எங்களை அவர் அடிக்க வந்த போதும் யாரும் உதவவில்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பெண் ஒருவர் பொலிசாரிடம் சம்பவம் குறித்து தகவல் தர அவர்கள் உடனடியாக மார்க்கை கைது செய்தனர்.
இது இனவெறி தாக்குதல் என பொலிசார் கூறியுள்ள நிலையில் மார்க்குக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.