ஏவுகணை மையங்களை அழித்த வடகொரியா : புகைப்படங்கள் வெளியீடு
பியாங்யாங்: வடகொரியாவில் ஏவுகணை சோதனை மையங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எதிரி நாடான தென்கொரியாவை அச்சுறுத்த அணு ஆயுதங்களை தொடர்ந்து தயாரித்து வந்தது வடகொரியா.
ஐநா பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் அணு ஆயுதங்கள் தயாரிப்பை கைவிடவில்லை. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், போர் தொடுக்க தயங்கமாட்டோம் என எச்சரித்தார். வடகொரியாவின் நடவடிக்கை தொடர்ந்ததால் கொரிய தீபகற்பத்தில் போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சி எடுத்தன. இதையடுத்து, கடந்த மாதம் 12ம் தேதி சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அணு ஆயுதங்களை தயாரிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்டவை குறித்து அந்த சந்திப்பின்போது இருவரும் பேசினர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்சத்தில் வடகொரியா மீதான பொருளாதார தடையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான உதவி செய்யப்படும் என கிம் ஜாங் உன்னிடம், டிரம்ப் உறுதியளித்திருந்தார். வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னரும் அணு ஆயுதங்களை அழிப்பதில் தயக்கம் காட்டியது.
இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதேநிலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை வடகொரியா சந்திக்கும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், அணு ஆயுதங்கள் தயாரிப்பு மையங்களை வடகொரியா அழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
தயாரிப்பு மையங்களை அழிப்பது தொடர்பான சேட்டிலைட் புகைப்படங்களை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.
.