பார்சிலோனாவில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியர்களுக்கு ஆபத்து இல்லை: அமைச்சர் சுஷ்மா தகவல்
மாட்ரிட்: ஸ்பெனிலுள்ள பார்சிலோனா நகரிலுள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்கிற சுற்றுலா பகுதியான ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியது. இதில் 13 நபர்கள் பலியாகிவிட்டனர்.
30க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் விபத்தா, இல்லை திட்டமிட்ட தாக்குதலா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். இது தீவிரவாதிகள் தாக்குதல் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் தீவிரவாதிகள் குறித்த பல்வேறு தகவல்களும், ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டிருப்பதும், இதனால் தீவிரவாத குழு ஒன்று காம்ப்ரில்ஸ் என்கிற இடத்தில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் போலீசார் அவர்களை நோட்டமிட்டு அவர்கள் தங்கியிருந்த பகுதியினை சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதையறிந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
போலீசாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 9 பேரும், போலீசார் ஒருவரும், தீவிரவாத கும்பலை சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர். மேலும் பார்சிலோனா நகரில் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், காம்ப்ரில்ஸ் நகரில் இரண்டாவது தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இது குறித்து கூறுகையில் ‘பார்சிலோனா தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. மத்திய அரசு தொடர்ந்து தூதரகத்துடன் தொடர்பிலுள்ளது.
அங்கிருக்கும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.
.